Saturday 1 March 2014

மரபணு மாற்றத்தை ஒழுங்கு படுத்துதல்

மரபணு மாற்றத்தை ஒழுங்கு படுத்துதல்
M. S.சுவாமிநாதன்

கள ஆராய்ச்சி : மரபணு மாற்று (பி.டி.) பருத்தியில் ரூ. 100  கோடி முதலீடு செய்யபட்டிருக்கும். ஆனால், அதிலிருந்து ரூ.50,000  கோடி லாபம் கிடைத்திருக்கும். போட்டோ : எம்.சாய்நாத்


மரபணு மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டு புதிய மரபியல் உருவாகி தற்போது அறுவத்தி ஒரு ஆண்டுகள் ஆகிறது. மரபணு மாற்று பயிர்கள் உருவாக்கப்பட்டு முப்பத்தி ஒரு  ஆண்டுகள் ஆகிறது. மரபணு மாற்று உயிரினத்தைகொண்டு கடலில் உள்ள எண்ணெய் சிதறல்களை சுத்திகரிக்கும் பொருட்டு உருவாக்கிய டாக்டர்.ஆனந்த சக்கரவர்த்தி முதன் முதலில் மரபணு மாற்று உயிரினத்திற்கு காப்புரிமை பெற்றார். மருத்துவம், சுற்றுப்புறம், தொழில் மற்றும் விவசாய துறைகள் மூலக்கூறு மரபியல்சார் அறிவியலின் காரணமாக பயனடைந்துள்ளன. மருத்துவ மரபியல்துறையில் நீதிநெறி சார்ந்த பிரச்சனைகள் மேல் பெருமளவில் அக்கறைகாட்டப்படுகிறது. உதாரணத்திற்கு மனித இனப்பெருக்கவியலில் மரபணு மாற்று தொழிநுட்ப மற்றும் குளோனிங் பயன்பாடு குறித்து சர்ச்சை உள்ளது.  
     ஆனால், வைத்தியத்திற்கு செய்யப்படும் மரபணு மாற்று குளோனிங் முறைகள் வரவேற்கப்படுகின்றன. பெருகிவரும் ஆற்று மற்றும் நிலத்தடி நீர் மாசுபாடுகளை உயிரிவழியில் களைய இத்தொழிநுட்பத்தின் மீது பெருமளவில் ஆர்வம் காட்டப்படுகிறது. உணவு மற்றும் விவசாயத்தில் மட்டுமே சுற்றுசூழல் மாசுபாடு, உயிர்-பாதுகாப்பு, பல்லுயிர் இழப்பு, மனித-கால்நடை ஆரோக்கியம் குறித்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

நன்மை மற்றும் தீமை கலந்திருக்கும் தொழிநுட்பங்களை கொண்டுவரும்போது, அதுபற்றிய ஒழுங்குநெறிமுறை வைத்திருப்பது அவசியமாகும். அதுவே அத்தொழினுட்பங்களை பாரபட்சமில்லாமல் ஆராய உதவும். இது அணு-ஆயுத தொழிநுட்பம் போன்றதே. இதனாலேயே, அரசாங்கம் பயோடெக்னாலஜி ஒழுங்குமுறை நிறுவன சட்டத்தை பார்லிமெண்டில் அறிமுகப்படுத்தியது.
     துரதிஷ்டவசமாக, இந்த சட்டத்தை இயற்ற செல்லுபடியாகும் காலம் பதினைந்தாவது லோக்சபா முடிவடைந்ததும் முடிந்துவிட்டது.  இதனால், இந்திய விவசாய ஆராய்ச்சி சபை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி சபை, மத்திய சுற்றுசூழல் மற்றும் வன அமைச்சகம்  மற்றும் பல துறைகளுடன் இணைந்து இந்த சட்டத்தை மறுஆய்வு செய்து புதிதாக தயாரித்து அடுத்த பாராளுமன்றம் அமையும்போது தாக்கல் செய்ய வேண்டும். அரசியல், பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிக்கைகள் முதலியவை பெருவாரியாக ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு அறிவியல் கழகம் உருவாக்கப்படலாம்.

சர்ச்சைகளை எதிர்நோக்குதல்
               
விவசாய பயோடெக்னாலஜி செயற்குழுவிற்கு 2003 இல்  நான் தலைவராக இருந்த போது  2004  ஒரு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் பார்லிமென்ட்டால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்பு மற்றும் தேசிய அளவில் மரபணு மாற்று உயிரிகளை உற்பத்தி செய்யும் ஆராய்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வேண்டுமென்று பரிந்துரை செய்திருந்தேன். இத்தொழினுட்ப ஆராய்ச்சி/பயிரிட  தேவையான பயிர்இடைவெளி மற்றும் பூச்சிக்குத் தேவையான புகலிடப்பயிர்களின் அத்தியாவிசயம் போன்ற முன்னெச்சரிக்கைகள் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது பரிந்துரை. இத்தகைய பரிந்துரைகள் சமர்பிக்கப்பட்டு தற்போது பத்தாண்டுகள் ஆகியுள்ள சூழ்நிலையில், இவற்றை நடைமுறைப்படுத்த இனி சிறிதேனும் காலம் தாழ்த்தக்கூடாது.  மரபணு மாற்று உயிரினங்களை எதிர்க்கும் அரசு-சாரா நிறுவனங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க நம்மிடம் மரபணு மாற்று உயிரின திறனாய்வு மற்றும் பாதுகாப்பு மதிப்பீட்டு  வழிமுறைகள் இருக்க வேண்டும்.
தற்போதுள்ள மரபணு மாற்று பயிர் ஆராய்ச்சி சம்பந்தமான தடையானது தொழினுட்பத்தை முடமாக்குவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் பல பல்கலைக்கழகங்களிடம் உள்ள மரபணு மாற்று உயிரினங்ளின் நன்மைகளை பெற தடையாக அமைந்துள்ளது. தற்போது மரபியல் விஞ்ஞானிகளிடம் உள்ள மரபணு மாற்று உயிரினங்கள் பூச்சி, நோய், வறட்சி முதலியவற்றை சமாளிக்கும் திறம்பெற்றவையாகவும், சத்துக்களை மேம்படுத்தும் திறன் கொண்டவையாகவும் உள்ளன. இவையனைத்தும் பொது நலனுக்காக இருக்கும் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இவை இளம் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டு தற்போது தெளிவில்லாத அரசு முடிவுகளால் அவனம்பிக்கைக்குள்ளாகி உள்ளனர்.
விவசாயம் என்பது மாநிலம் சார்ந்த துறையாகையால் மாநில விவசாய பல்கலைகள், அரசுவிவசாய துறை முதலியவை களஆராய்ச்சி திட்டம் மற்றும் செயல்பாட்டு வழிமுறைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இத்தகைய ஆராய்ச்சிகள் பத்து வருட காலம் பிடிப்பதால், இதனை முடுக்கி விட்டு துரிதப்படுத்தி நம்பகமான கள ஆராய்ச்சி மற்றும் நன்மை-தீமை க்கான கள முடிவுகளை கொண்டு வரவேண்டும்.

அரசு-தனியார் கூட்டுப்பங்களிப்பு
     பயோடெக்னாலஜி ஆராய்ச்சியில் முதலீடிற்கான வருமானம் அதிகம். பி.டி. (மரபணு மாற்று) பருத்தியில் சுமார் ரூ.100 கோடி முதலீடே செய்யப்பட்டு சுமார் ரூ.50,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. பொதுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்கள் அதிக விளைச்சல் மற்றும் நோய் எதிர்ப்புதிறன் கொண்ட ரகங்களை உருவாக்க முற்பட வேண்டும். ஏனென்றால் தனியார் துறையால் வீரிய ஒட்டு ரகங்களை மட்டுமே உருவாக்க முடியும், மேலும் அதனை விவசாயிகள் வருடாவருடம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். பொதுத்துறை மற்றும் தனியார்துறை கூட்டு முயற்சியால் விவசாயிகளுக்கு மிகபல நல்ல தொழினுட்பங்களை கொண்டுசேர்க்க முடியும்.
     ஊட்டச்சத்து பாதுகாப்பு, சுத்தமான நதி நீர், சுகாதாரம், அடிப்படை ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து அறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். உணவு பாதுகாப்பு சட்டம் 2013  அனைவருக்கும் உணவு கிடைக்க எவ்வாறு பசிக்கு எதிராக சமூக பாதுகாப்பு அளிக்கிறதோ அது போல் ஊட்டச்சத்து பற்றாக்குறை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
     உணவிலேயே பல ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ள உணவுகளின் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். முக்கியமாக முருங்கை, சக்கரை வள்ளி கிழங்கு, நெல்லிக்காய், கறிப்பலா, போன்ற இயற்கையான பல்லூட்ட உணவுபயிர்கள் ஊட்டசத்து தோட்டங்களிலும் விவசாய-காடுகளிலும் பிரபலமாக்கப்பட வேண்டும். மரபியலில் உருவாக்கப்பட்ட இரும்புச்சத்து மிக்க கம்பு வகைகள் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். எனது வேண்டும் கோளின் அடிப்படையில், நிதியமைச்சர் கடந்த ஆண்டுக்கான (2013-14)  நிதிநிலை அறிக்கையில் ரூ.200 கோடியை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊட்டச்சத்து பற்றாக்குறை சுமையை குறைக்க ஊட்டசத்து பண்ணைகளை உருவாக்க ஒதுக்கினார். இந்த ஆண்டு சர்வதேச குடும்ப ஆண்டாகையால் ஒவ்வொரு குடும்பமும் ஊட்டச்சத்து பண்ணைகளை உருவாக்கி ஊட்டச்சத்து பற்றாக்குறைகளை களைய ஒரு திட்டத்தை அமல்படுத்தலாம்.

ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல்

     இந்திய அரசியலில் மரபணு மாற்று பொறியியலுக்கான ஆதரவு தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆராய்ச்சி நிறுவனமும் மரபணு மாற்று ஆராச்சிக்கான திட்ட பரிந்துரை கமிட்டிகளை வைத்திருக்க வேண்டியது அவசியம். அவைகளின் நோக்கம் மரபியலில் மரபணு மாற்று பயிர் ஆராய்ச்சி திட்டங்கள் தேவையா என்பதை பரிந்துரைப்பதாக இருக்க வேண்டும். தீர்க்க முடியாத, வேறு வழியில்லாத பிரச்சனைகள் மட்டுமே மரபணு மாற்று ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
     மரபணு அறிவியல் நெறிமுறைகள், ஆராய்ச்சிகளை விவசாயிகளுக்கு புரியும் வகையில் செயல்முறைகளாக கொண்டுசெல்வதில் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. மரபணுமாற்று உணவு பயிர்களின் சமையல் மற்றும் சுவை சார்ந்த ஆராய்ச்சிகளை மனையியல் கல்லூரிகள் மேற்கொள்ளலாம். இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகமான காணப்படுகிறது. இயற்கை விவசாய சான்றிதழ் நடைமுறைகளும் மார்கர் கொண்டு செய்யப்படும் மரபணு மாற்று மரபியல் ரகங்களை அனுமதிக்கிறது.
     இந்தியாவில் பல மாநிலங்கள் இயற்கை விவசாய மாநிலங்களாக மாறுகின்றன. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் இயற்கை விவசாயத்திற்கான அடிப்படை தேவைகளை விளக்க வேண்டும். பூச்சி, நோய் மற்றும் களை ஆகிய இம்மூன்று முக்கோண காரணிகளின் சவாலை இயற்கை விவசாயத்தில் சமாளிக்க வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும்.
பல்லுயிர் பெருக்கமே பயோடெக்னாலஜி தொழிலின் மூலதனமாகும். அதனை காப்பது மற்றும் நேர்த்தியாக அளவாக உபயோகிப்பது இவ்விஞஞானிகளின் கருத்தாக இருக்க வேண்டும். வேளாண் அறிவியல் நிலையங்கள் மரபணு மாற்று தொழிநுட்பம் சம்பந்தமான அறிவியல்பூர்வமான நம்பகமான பரிந்துரைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். முன்னர் சொன்ன அறிவியல் கழகமானது, ராயல் சொசைட்டி, லண்டன் செயல்படுவது போல், பொதுமக்களுக்கான அறிவியல் புரிதல் மற்றும் அரசியல்வாதிகளுக்கான அறிவியல் புரிதல்  என இருவேறு குழுக்களை உருவாக்கி செயல்பட வேண்டும்.

தகவல்களை பகிர்தல்
     ஊடக தகவல் மையங்கள் ஏற்ப்படுத்தப்பட வேண்டும். கிராம தகவல் மையங்களில் மரபணு மாற்று உயிரிகள் சம்பந்தமாக அறிவியல்பூர்வமான, சரியான தகவல்களை கொண்டு சேர்ப்பதில் பங்காற்ற வேண்டும். அமேரிக்கா போன்ற நாடுகளில் சுற்றுசூழல் பாதுகாப்பு குழு, உணவு மற்றும் சரக்குகள் நிர்வாகக்குழு, விவசாய பயிர் ஆரோக்கிய ஆய்வு குழு ஆகிய மூன்று அமைப்புகள் சேர்ந்து மரபணு மாற்று உயிரிகள் சம்பந்தமான ஆராய்ச்சிகள், விளைவுகள், ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேற்கொள்கின்றன. அதுபோல, நமக்கும் வல்லுனர்களால் நிர்வகிப்படும் அத்தகைய மரபணு மாற்று பயிர் மற்றும் உணவு சார் ஒழுங்குமுறை அமைப்புகள் தேவைப்படுகிறது.
     முற்சொன்னது போல் ஆரம்பிக்கப்படவேண்டிய அறிவியல் கழகமானது தற்போதுள்ள தடையை நீக்கி ஆராய்ச்சிகளை பாதுகாப்பாக செய்வதில் கவனம் செலுத்த முனைய வேண்டும். இவ்வறிவியல் கழகம் தேர்தல் வாக்குறுதிகளில் சிறுவிவசாயிகள் தொடர்பான புதிய தொழினுட்பங்களை  உட்கொணர்ந்து  தேர்தல் அறிக்கைகளை அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும்.

(பேராசிரியர். M.S.சுவாமிநாதன், நிறுவன தலைவர் மற்றும் தலைமை அறிவுரையாளர், யுனெஸ்கோ, தலைமை, ஈகோடெக்னாலஜி, M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, சென்னை. )    


Source: 
Translation of "Regulating Genetic modification" published in "THE HINDU"  February 25, 2014 Open-Ed  http://www.thehindu.com/opinion/op-ed/regulating-genetic-modification/article5723031.ece
 

No comments:

Post a Comment