Monday, 16 August 2010

கோடியில் இருவர்..


சாலையில்
கடுமையான வெயிலில் நடக்கும் போதெல்லாம், ஓரமாய், அமைதியாய் நிழலைப் பொழியும் மரம் தாயின் மடிபோல் சுகமாய் அரவணைத்துக் கொள்ளும். ஒரு போதும் நினைத்துப் பார்ப்பதில்லை, இந்த மரத்திற்கு விதையிட்டு, நீரூற்றி வளர்த்தது யார், இந்த மரத்தின் வரலாறு என்னவாக இருக்கும் என்று.

cid:1.4193769296@web8903.mail.in.yahoo.com

மரம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில்லாத துரதிருஷ்டம், அந்த இரண்டு நபர்களைச் சந்தித்த போது தகர்ந்து போனது. மரத்தின் மேல கணக்கிலடங்கா காதலும் வெறியும் மனதில் வேரூன்றியது... ஈரோடு மாவட்டம் இந்த இரண்டு நபர்களைப் பெற என்ன தவம் செய்ததோ!!!?

கோடியிwadadaassல் ஒருவர் - 1

ஈரோடு அருகே உள்ள ஒரு மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்துஏனுங்க இந்த மரம் நடுவாரேஎன்று கேட்க ஆரம்பிக்கும் போதேஅட நாகாராஜண்ணன கேக்றீங்களா, அந்த வழியாப் போங்கஎன்று பெருமிதத்தோடும், நம்மை பார்ப்பதில் கொஞ்சம் வெட்கத்தோடும் வழி காட்டுகிறார்கள்.

cid:7.4193769297@web8903.mail.in.yahoo.com

தன்னுடைய வீட்டிலேயே கைத்தறி துண்டு நெசவு செய்வதை தொழிலாகக் கொண்டிருக்கிறார் 56 வயதான திரு. நாகராஜன் (04294-314752 / 94865-20483) அவர்கள். மிக மிகச் சாதாரணமான ஓட்டு வீடு. எங்களுக்கு நாற்காலிகளை எடுத்துப் போட்டு விட்டு மிகுந்த சினேகமாக சிரிக்கிறார்.

cid:3.4193769297@web8903.mail.in.yahoo.com

இந்த மாமனிதர் தனது 17வது வயதிலிருந்து கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து, முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.

cid:4.4193769297@web8903.mail.in.yahoo.com

ஆரம்பத்தில் தன் செயல்களைக் கண்டு பைத்தியகாரன் என்று ஊரே சொன்னது எனச் சொல்லி சிரிக்கிறார். பள்ளிக்கூடம் அருகே தான் வளர்த்து ஆளாக்கிய மரத்தில் மாலை வேளைகளில் பல்லாயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் கீச்கீச்சென கத்துகிறது என்று சொல்லும் போது அவரது முகம் மகிழ்ச்சியில் திழைக்கிறது.

cid:5.4193769297@web8903.mail.in.yahoo.com

பேச்சினிடையே, எவ்வளவோ மறுத்தும் சமையலறைக்குச் சென்று அரிவாள்மனையில் எலுமிச்சம் பழத்தை அரிந்து, சர்பத் தயாரித்துக்கொடுத்து உபசரிக்கிறார். மகள் வயிற்றுப் பேரன் இவரோடு வளர்கிறார், அதோடு அந்தச் சிறுவனும் தற்சமயம் நான்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.

cid:6.4193769297@web8903.mail.in.yahoo.com

தினமும் காலையிலும், மாலையிலும் மரம் நடுவதையும், அதனைப் பராமரிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பவருக்கு வந்த சவால்கள் பல. சாலையோரம் நட்ட மரங்களை, விவசாய நிலத்தில் நிழலடிக்கிறது என்று விவசாயிகள் வெட்டிய சோகமும், சாலைப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் என அவ்வப்போது பல சில்லறை காரணங்களைச் சொல்லி மரங்களை சர்வசாதாரணமாக வெட்டி வீசுகிறார்கள் எனக்கூறும் போது அவருடைய மனதில் உணரும் வலி அப்படியே முகத்தில் வந்து படிகிறது. குறிப்பாக மரத்தின் கிளையை ஒரு நாள் சரக்குக்கும், பரோட்டாவிற்கும் விறகாக மாற்றும் அற்ப மனிதர்களும் இருக்கிறார்கள் என அறியும் போது நமக்கே மனது வெம்புகிறது.

ஒவ்வொரு மரத்தையும் தன் குழந்தையாகவே பாவிக்கிறார். ஆல், அரசன், புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை என வகை வகையாய் எட்டு திசையிலும் வளர்த்தெடுத்திருக்கிறார். கடும் கோடையிலும் கூட மரக்கன்றுகளைச் சுற்றி தேங்காய் நார் தூவி, அருகில் உள்ள விவசாயிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி நீர் பெற்று தண்ணீர் தெளித்து செடிகளை காப்பாற்றியிருக்கிறார்.

cid:8.4193769297@web8903.mail.in.yahoo.com

காஞ்சிக்கோவில் அருகில் இருக்கும் ஒரு மலைக்கோவிலைச் சுற்றி விதவிதமான மரக்கன்றுகளை நடவு செய்து அந்த மலைமேல் இருக்கும் பாறைகளுக்கிடையே தேங்கியிருக்கும் தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி, அதைக் காப்பாற்றி, இன்று அந்த மலையைச் சுற்றி அற்புதமாக மரங்களை வளர்த்து அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

cid:6.4193769297@web8903.mail.in.yahoo.com

மிகுந்த ஆச்சரியமாக, நெகிழ்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று.

கோடியில் ஒருவர் - 2

சத்தியமங்கத்திலிருந்து பங்களாபுதூர் வரும் வழியில் இருக்கிறது ஏழூர். ஏழூரிலிருந்து வடக்குத் திசையில் திரும்பி ஒரு மைல் கடந்தால் வருகிறது வேட்டுவன் புதூர். முதலில் வரவேற்கிறது மிகச்சிறிய ஒரு கடை. வெளியூர் ஆட்கள என்று தெரிந்ததுமே தானாகவே கேட்கிறார்களஅய்யாச்சாமி அண்ணன தேடி வந்தீங்களா!”...

cid:9.4193769297@web8903.mail.in.yahoo.com

இந்த மரம் வளர்த்துறாரேஎன்று இழுக்க, “அட அய்யாச்சாமியண்ணந்தான்.... இந்த அப்பிடி போங்க.. அந்த ஓட்டு வீடுதான்

cid:10.4193769297@web8903.mail.in.yahoo.com

ஏழூர் சென்று அவரைச் சந்திக்கிறோம் என்ற தகவலைச் சொன்னபோதே காஞ்சிக்கோவில் நாகராஜன் நம்முடம் கிளம்பிவிட்டார். திரு. அய்யாசாமி பற்றி முரளிகுமார் பத்மநாபன் வலைப்பக்கத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன்.

cid:11.4193769297@web8903.mail.in.yahoo.com

கொளுத்தும் வெயிலில் அந்த வீட்டை அடைந்தோம். ஏழடி அகலத்தில் பதினைந்தடி நீளத்தில் ஒரு ஓட்டு வீடு. குனிந்து உள்ளே எட்டிப் பார்க்கிறோம். இரண்டு கயிற்று கட்டில்களில் இளைத்த உடம்போடு ஒரு தம்பதி, சத்தம் கேட்டு எழுந்து வாங்க என்று வரவேற்கிறார்.

cid:12.4193769297@web8903.mail.in.yahoo.com

எலும்பு தோலுமாய் காட்சியளிக்கும் பெரியவர் திரு. அய்யாசாமி (80120-26994) 74 வயதை தாண்டிக்கொண்டிருக்கிறார். சின்ன வயதிலிருந்தே இவருடைய தந்தை மரங்களின் மேல் கொண்டிருந்த காதல் இவருக்கும் தொத்திக் கொள்கிறது. விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள். திட்டம் தீட்டி சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள். சிறு செடி முதல் முப்பது, முப்பத்தைந்து வயது வரை இருக்கும் வேப்ப மரங்களை பார்க்கும் போது உடலும், மனதும் சிலிர்க்கிறது.

cid:13.4193769297@web8903.mail.in.yahoo.com

சுவாரசியமான தகவல், கடும் கோடையில் வீட்டிலிருந்த தண்ணீரைக் கூட எடுத்துச் சென்று செடிகளுக்கு ஊற்றியிருக்கிறார். “ஊட்டுல தண்ணியில்லைனா ஒரு நா சண்ட போடுவாங்க, இல்லன சோறு ஊத்த மாட்டாங்க, ஆனா செடி செத்துப்போச்சுன்னா என்ன பண்றதுங்கஎன்ற போது, அருகில் எலும்பும் தோலுமாய் நின்ற அவரது மனைவி வெட்கத்தில் சிரிக்கிறார்.

cid:14.4193769297@web8903.mail.in.yahoo.com

அதிசயம், இந்த தள்ளாத வயதிலும் பெரியவர் அய்யாசாமி வீட்டில் பத்துப் பதினைந்து மரக்கன்றுகள் தயாராக இருக்கின்றது. பேசி, நெகிழ்ந்து, மனது கனத்து, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும் போதுஅந்த பள்ளத்தோரம் போனிங்கனா, மரங்களைப் பார்க்கலாம்என்று சொல்கிறார்.

cid:15.4193769297@web8903.mail.in.yahoo.com

கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் பள்ளம் முழுதும் கனத்துக் கிடக்கிறது அழகான வேம்பு. பார்க்க பார்க்க வெயிலில் வெம்பிய உடல், மனதோடு சேர்ந்து குளிர்கிறது. அவருக்கு உதவியாக இருக்கும் திரு. விஜயகுமார் (98423-44399) நம்மோடு வந்திருந்து சுற்றிக் காட்டுகிறார். எல்லாம் முடிந்து கிளம்பும் போது, வேட்டுவன் புதூரில் முதலில் நாம் பார்த்த அந்த சிறிய மளிகை கடையில் பெரியவர் திரு. அய்யாசாமி நமக்காக காத்திருக்கிறார். விடைபெற்றுக் கிளம்புபோது ஒரு குளிர்பான பாக்கெட்டை கட்டாயப்படுத்தி கையில் திணிக்கிறார். வாகனத்தை இயக்கியபடி அந்த பாக்கெட்டை வாயில் கடித்து உறிஞ்சுகிறேன், இதுவரை அறியாத ஒரு சுவையை அதில் உணர்கிறேன்.

cid:16.4193769298@web8903.mail.in.yahoo.com

இந்த மாமனிதர்களின் தியாகங்களை நினைத்து, மனதிற்குள் அலையடிக்கிறது. யாரோ சிலரின் தியாகங்களால் தானே இந்த உலகம் யாரால் இயங்குகிறது. யாரோ போட்ட பாதையில் தானே நாம் எளிதாய் பயணிக்கிறோம், ஏதோ பறவையின் எச்சத்தில் விழுந்த மரம் வெளியிடும் ஆக்சிசனைத் தானே சுவாசிக்கிறோம்.

cid:17.4193769298@web8903.mail.in.yahoo.com

ஒரு ஏமாற்று சாமியாருக்கு, திரையில் மினுக்கும் ஒரு நடிகனுக்கு, மட்டையை சுழற்றி கோடியில் கொழிக்கும் விளையாட்டுக்காரனுக்கு கிடைத்த கவனம், இந்த மாமனிதர்களுக்கு கிடைக்க வில்லையென்பதை நினைக்கும் போது நிறைய அவமானமாக இருந்தது. ஒரு மரம் தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கும் சுத்தமான காற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாம். வறுமையின் பிடிக்குள் இன்னும் சிக்கித்தவிக்கும் இந்த மனிதர்கள் இந்த பூமிக்கு அர்பணித்தது பலாயிரம் கோடிகள் என்றால் மிகையாகது. விருதுகளும், கவனமும் இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை, ஏனெனில் இவர்கள், எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை.

cid:18.4193769298@web8903.mail.in.yahoo.com

இந்த மனிதர்களை வரும் காலத்தில் உலகம் மறக்காமல் இருக்க ஆவணப்படுத்த வேண்டும் என்ற வேட்கை மனதில் உருவானது. அவர்களிடம் அனுமதியோடு, எப்பாடுபட்டேயானும் அவர்களின் தியாகம் குறித்து ஒரு ஆவணப் படத்தை எடுத்து வரும் காலத்திற்கு பதிவு செய்துவிட்டுப் போக வேண்டும். அடுத்து அவர்களைப் பற்றிய செய்திகளை இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று அவர்களின் மனதில் நிரப்பிடவேண்டும்.

cid:19.4193769298@web8903.mail.in.yahoo.com

எல்லாம் ஒரு சிறுபுள்ளியில் தானே ஆரம்பித்திருக்கும், இதோ ஒரு சிறுபுள்ளியில் பசுமைக்கான ஒரு பயணம் ஆரம்பமாகிறது.

Friday, 30 July 2010

பாலும் கசந்ததடி... பசுவும் மடியுதடி...!


பாலும் கசந்ததடி... பசுவும் மடியுதடி...!


ஆர்.எஸ். நாராயணன்


Last Updated :

இன்று பருப்பு விலையும் உயர்ந்துவிட்டது. பால் விலையும் உயர்ந்துவிட்டது. ஏழை மக்களுக்கு வேண்டிய புரதச்சத்து இனி இல்லை என்றாகிவிட்டது. ஏனெனில், வறுமை நிலையும் உயர்ந்துவிட்டது.


ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையைவிட, இந்தியாவின் சில வடமாநிலங்களின் - குறிப்பாக பிகார், ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், உ.பி.யில் வறுமைநிலை கூடுதல் என்று புள்ளிவிவரம் கூறுகிறது.


புரதச்சத்து மனிதனுக்கு மிகவும் அவசியம். புரதச்சத்து பெறுவதில் வடநாட்டு மக்களுக்கும் தென்னாட்டவர்களுக்கும் நுண்ணிய வேற்றுமை உண்டு. வறுமைக் கோட்டில் வாழும் தென்னாட்டவரின் புரதத் தேவை தினம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது இறைச்சி உணவால் நிறைவேறுகிறது.


பால், பருப்பு என்றுமே கிடையாது. அப்படிப் பயன்படுத்தினாலும் தயிர் வடிவிலோ, மோர் வடிவிலோ வாரம் ஒருநாள், மாதம் இருநாள் என்ற கணக்கில் இருக்கலாம். அதேசமயம் ஓட்டல், மெஸ் உணவில் பால் (தயிர், மோர் வடிவில்) பருப்பு வேண்டும். பால் இல்லாமல் டீக்கடை நடத்த முடியாது. பெரும்பாலான ஏழைத் தமிழர்களின் புரதத்தேவை வீட்டு உணவைக் காட்டிலும் வெளிஉணவு மூலம் நிறைவேற்றப்படலாம்.

மேற்கூறிய வடஇந்திய கிராமங்களில் தமிழ்நாடு அல்லது ஆந்திரப்பிரதேசம்போல் ஊர்தோறும் ஓட்டல்களையோ டீக்கடைகளையோ காண்பது அரிது. முழுக்க முழுக்கத் தங்களின் புரதத் தேவையை வீட்டு உணவின் மூலமே நிறைவேற்ற வேண்டும். வடஇந்தியாவில் ஜைன மதத் தாக்கம் காரணமாகப் புலால் உண்போர் குறைவு.


உலகிலேயே முழுக்க முழுக்க சைவ உணவை உண்பவர்கள் இந்தியாவில்தான் வாழ்கின்றனர். இந்தியாவிலும்கூட வடஇந்தியாவில்தான் மதத்தடை காரணமாக முட்டையைக்கூட உண்ணாதவர்கள் அதிகம் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் உண்டு. புத்தமதத்தால் ஈர்க்கப்பட்ட சைவ சித்தாந்திகள் வடஇந்தியாவில்தான் மிக அதிகம். வட இந்திய ஏழை மக்களின் கதி பரிதாபகரமானது. அவர்களுக்கு என்ன விலை கொடுத்தாவது பால் அல்லது பருப்பு வேண்டும்.


தமிழ்நாட்டில் வாழும் ஒரு சைவ நடுத்தரவர்க்கப் பெண்மணி - மதுரை புறநகரில், பாக்கெட் பால் வாங்காமல் ""கறந்தபால்'' வாங்குகிறார். அவரிடம் விசாரித்ததில்... ""பருப்பு விலை உயர்ந்ததிலிருந்து பருப்பை நிறுத்திவிட்டோம். இப்போது பாலும் கசந்துவிட்டது. 1 லிட்டர் பால் ரூ. 24 என்று பால்காரர் சைக்கிளில் வந்து ஊற்றுகிறார். எங்கள் மாத வருமானம் ரூ. 2,500. தினம் அரை லிட்டர் பால் வாங்குவோம். அந்தச் செலவே ரூ. 360 முதல் 400 ஆகிறது. அந்தப் பாலில் 40 சதவீதம் தண்ணீர் கலந்து விற்கப்படுகிறது. எனது 2 குழந்தைகளுக்கும் குடிக்கப் பால் தருவேன். அந்தத் தண்ணிப் பாலில் நான் ஆழாக்குத் தண்ணீர் விட்டுக் குழந்தைகளுக்கு டம்ளர் நிறைய வழங்கினால், என் பிள்ளை, ""ஏனம்மா பால் கேட்டால், தண்ணியில் பால்விட்டுத் தருகிறீர்களே'' என்று தினம் தினமும் வம்பு செய்கிறான்''. அவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்று கூறினார். அவருக்கு யார்தான் என்ன பதில் சொல்ல முடியும்? இந்தியாவில் உள்ள எல்லாப் புறநகர்ப் பகுதிகளிலும் இதுவே உண்மை நிலை.


ஹைதராபாதில் உள்ள தேசிய ஊட்ட உணவு நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற வீணா சத்ருக்னனின் கருத்துப்படி, 10 முதல் 15 வயதுள்ள சிறார்களுக்குக் குறைந்தபட்சம் 500 மில்லியும் வயதானவர்களுக்கு 250 மில்லியும் பால் வழங்கினால்தான் தேவையான ஊட்டத்தைப் பெற முடியும். விஜயலட்சுமியின் குழந்தைகளுக்கு 100 மில்லி தண்ணிப்பால் வழங்கவே இயலவில்லையே என்று வீணா சத்ருக்னனிடம் கேட்டால், ""கோடி கோடியாகப் பணம் செலவழித்து நகரங்கள்தோறும் விமான நிலையங்கள் கட்டும்போது குழந்தைகளுக்கு வேண்டிய பால் வழங்க உணவு மானியம் செலவழிக்க முடியாதா?'' என்று கேட்கிறார். வீணாவுக்கு பாரதப் பிரதமர்தான் பதில் கூற முடியும்.


1960-ல் பால் உற்பத்தி 2 கோடி டன் என்ற நிலை 2007-ல் 10.6 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. வளர்ந்து செல்லும் மக்கள்தொகைக்கு ஏற்ப பால் உற்பத்தி உயர்ந்துள்ளதை மறுக்கவில்லை. கறந்த பாலா, கலப்படப் பாலா என்றெல்லாம் யோசிக்காமல் கவனித்தால் இப் புள்ளிவிவரம் நம்பக்கூடியதே. ஐ.நா. உணவு விவசாய அமைப்பின் புள்ளிவிவரப்படி இந்தியாவில் 1995-ல் தலா ஆண்டு நுகர்வு 57.7 கிலோ பால் என்ற நிலை 2005-ல் 65.2 கிலோ.


மாநகரங்களில் வாழும் மகாபிரபுகளுக்கு பாக்கெட்டுகளில் பால் கிடைத்துவிடும். எந்த நேரத்திலும் எந்தக் கடையிலும் பால் கிடைத்துவிடுவதால் இந்த வெள்ளை திரவத்தில் நிஜமான பால் எத்தனை சதவீதம்? எவ்வளவு சத்து உள்ளது? எவ்வளவு விஷம் உள்ளது என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய நேரம் இல்லை. அய்யா பேப்பர் படிப்பார். அம்மணி அந்த வெள்ளை திரவத்தைக் கரும்பழுப்பாக மாற்றி, அது காப்பி என்று கொண்டு வைப்பதை அவசரஅவசரமாக உறிஞ்சிவிட்டு அடுத்த வேலையை அவர் கவனிக்க வேண்டும். உண்மையில் பாலைப் பசு தருகிறதா? இயந்திரம் தருகிறதா? என்ற கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் தருவது கடினமே.


ஆண்டுக்கு ஆண்டு தீவனத் தட்டுப்பாடு தீவிரமாயுள்ளது. மாடுகளுக்குப் போதிய தீவனம் கிட்டவில்லை. மாடுகளுக்குத் தேவையான புரதச்சத்து மிகுந்த பிண்ணாக்கு உற்பத்தி குறைந்து விட்டது. பிண்ணாக்கு ஏற்றுமதி உயர்ந்துவிட்டது. பாலிலிருந்து மிச்ச சொச்சமுள்ள பாஸ்போ புரோட்டீனான பாலாடைக் கட்டியும் ஏற்றுமதி செய்யப்பட்டு விடுவதால், பாக்கெட் பாலில் என்ன சத்து மிஞ்சும் என்று புரியவில்லை. பால் பற்றிய புள்ளிவிவரங்களில் பல பச்சைப்புளுகுகள். பாலின் உற்பத்தி உயர்ந்துவிட்டது என்பது முதல் பொய். பால்போன்ற திரவத்தின் உற்பத்தி - இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடர் மூலமோ, ஸ்டார்ச், யூரியா கலவை மூலமோ, வாசமில்லா வெள்ளை திரவம் மூலமோ பால் அதாவது கலப்படப் பால் உற்பத்தி உயர்ந்திருக்கலாம்.


நல்ல சத்தான பால் வேண்டுமானால் கறவை மாடுகளுக்குப் புரதச்சத்துள்ள பிண்ணாக்கு வேண்டும். எண்ணெய் வித்து உற்பத்தியும் சமையல் எண்ணெய் உற்பத்தியும் குறைந்துவிட்டாலும், ஏற்றுமதி அதிகம். கடந்த சில ஆண்டுகளில் பிண்ணாக்கு விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இன்று தரமான நல்ல கடலைப் பிண்ணாக்கு விலை கிலோ ரூ. 24. தவிடு விலை மூன்று மடங்கு உயர்ந்துவிட்டது. ஏனெனில், தவிட்டு எண்ணெய் உற்பத்தியில் கிட்டும் தவிட்டுப் பிண்ணாக்கும் ஏற்றுமதியாகிறது. தவிட்டில் உள்ள புரதச்சத்தும் மாடுகளுக்குக் கிட்டுவது குறைந்துவிட்டது.


ரூ. 100-க்கு விற்ற 50 கிலோ தவிடு மூட்டை இன்று ரூ. 320. ஒரு கட்டு வைக்கோல் ரூ. 20 என்ற நிலை மாறி இன்று ரூ. 52. மேய்ச்சல் நிலத்தில் புல்லுக்குப் பதில் வேலிக்கருவை. அதையும் விடாமல் கொழுந்தைக் கடிக்கும் மாடுகளுக்கு வாய் வீங்கி அசை போட முடியாத நிலை. உலர்ந்த புல், அதாவது வைக்கோலைத்தவிர இதர தானியங்களின் அறுவடைக் கழிவுகள் பலவற்றையும் பசுக்கள் உண்டு பசியாறும். இதற்கும் ஆபத்து வந்துவிட்டது. இந்தியாவில் மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் பயோமாஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட பயோமின் தொழிற்சாலைக்கு மாட்டுத்தீவனமான உலர்ந்தபுல் பயனாகிறது. இவற்றை வடஇந்திய பயோமின் தொழிற்சாலைகள் எரித்து மின்சாரமாக்குவதாகக் கேள்வி. ஆந்திரத்தில் உமித் தவிடும் எரிமின்சாரமாகிறதாம்.


கடுமையான தீவனத்தட்டுப்பாடும், மாட்டுத்தீவன உற்பத்தி குறைந்தும் செல்லும்நிலையில் பால் உற்பத்தி மட்டும் உயர்வதாகச் சொன்னால் அது நம்பும்படியாக உள்ளதா? தென்னாட்டைவிட குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் தீவனத்தட்டுப்பாடு காரணமாகக் கறவை மாடுகளை இறைச்சிக்காக விற்கும் போக்கு பன்மடங்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டிலும் "பால் விவசாயிகள்' உருப்படிகளைக் குறைத்தவண்ணம் உள்ளனர். ஒன்று அல்லது இரண்டு கறவை மாடுகளுக்கு மேல் வைத்துக் கொள்வதில்லை. இப்போது மாட்டு இறைச்சி விலை உயர்ந்துள்ளதால் இறைச்சிக்குச் செல்லும் மாடுகள் ஆண்டுக்கு ஆண்டு கூடி வரும் நிலையில், பால் உற்பத்தி பெருகுவது எப்படி?


இன்று "பால் விவசாயிகளிடம்' நாட்டுரக மாடுகள் இல்லை. சீமைக்கலப்பினமே உள்ளது. ஒரு நாட்டுப்பசுவைவிட சீமைக்கலப்பினத்துக்கு 2 அல்லது 3 மடங்கு தீவன உணவு வேண்டும். அப்படி ஊட்டம் கொடுத்தால்தான் 5, 6 லிட்டர் பால் கறக்கலாம். வசதியுள்ள பெரும்பண்ணைகளில் 20 லிட்டர் பால் கறக்கும் மாடுகள் உண்டு. தீவனத்தட்டுப்பாடு காரணமாகக் கறவை குறைந்துவிட்டது. மாடுகள் போதிய ஊட்டம் இல்லாமல் மடியும் நிலைக்குத் தள்ளப்பட்டு இறைச்சிக் கடைகளுக்குச் செல்வதை கிராமங்களில் கண்கூடாகப் பார்க்கலாம்.


பாலுக்கு ஏங்கும் பச்சைக்குழந்தை முதல் வளரும் சிறார்வரை பால் இல்லாமல் சோகையாக இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஊட்டம் தரும் பாலை வழங்கும் பசுக்களும் ஊட்டம் இல்லாமல் உயிரை விடுகின்றனவே! இவற்றுக்கெல்லாம் விடையளிக்க வேண்டிய அரசாங்கம் அல்லது ஆளுங்கட்சியினரின் கவலையெல்லாம் பால் மடியைப் பற்றியது இல்லை. மாறாக, அவரவர் மடியை எப்படி நிரப்பலாம் என்று சிந்திக்கிறார்கள். ""எல்லாம் நமது தலைவிதி'' என்று நமக்குள் நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டியதுதான்.


Source: http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=279671&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF...%20%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF...!